ஆதிச்சநல்லூர்ப் புதைகுழிகளில் கண்டறியப்பட்ட பல்வேறு உலோகப் பொருள்களை உருவாக்கியவர்கள் சமூக அந்தஸ்தில் உயர்வாகக் கருதப்பட்ட ஆச்சார்ய மரபினராகவே இருந்திருக்க வேண்டும். இத்தகைய தச்சர் - கொல்லர் சமூகத்தவரின் தலைநகர இருக்கையாகத் திகழ்ந்தமையால்தான் (கொல்லுத் தொழில் இருக்கை) கொற்கை என்ற ஊர்ப்பெயர் உருவாகி இ¢ருக்கவேண்டும். கொற்கை, ஆதிச்சநல்லூரிலிருந்து 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கொற்கையிலிருந்து 7 கி.மீ. தொலைவில் நக்கீரரை நினைவூட்டும் வகையில் கீரனூர் என்ற ஊரும் உள்ளது.
‘வேள்வி செய்யாத பார்ப்பனர்' எனச் சங்க இலக்கியம் குறிப்பிடுவது வேறொரு வகையிலும் கவனத்துக்குரியதாகும். வேள்விச் சடங்குகளைப் புறக்கணித்த வைதிக சமயத்தவரை விராத்யர் எனப் புராணங்களும், தர்ம சாஸ்திர நூல்களும் குறிப்பிடுகின்றன. முதுமக்கள் தாழிப் பண்பாடு அதாவது இரும்பு யுகத்தை அறிமுகப்படுத்திய பெருங்கற்படைப் பண்பாடு என்பதே விராத்யர்களுடைய பண்பாடுதான் என்பது அறிஞர் அஸ்கோ பர்போலா அவர்களின் கருத்து.7 கி.பி. 16ஆம் நூற்றாண்டில் கமலை ஞானப்பிரகாசரால் எழுதப்பட்ட ‘சாதிநூல்', விஸ்வகர்ம சமூகத்தவரை ‘விராத்யர்' பிரிவிலேயே சேர்க்கிறது.8
விஸ்வகர்ம சமூகத்தவர் பலர், சமண பெளத்த சமயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டபோது அச்சமயங்களை ஆதரித்தனர். கருங்கல்லை மரணச் சடங்குகளோடு மட்டுமே வைதிக சமயம் தொடர்புபடுத்திற்று. பெருங்கற்படைப் பண்பாட்டின் அரச குருக்கள் மரபினரான விஸ்வகர்ம சமூகத்தவர், சமண பெளத்தப் பள்ளிகளை உருவாக்கவும், அப்பள்ளிகளுள் கற்படுக்கைகள் அமைக்கவும், கற்படுக்கைகள் அமைக்கப்பட்ட செய்தியைக் கல்வெட்டு எழுத்தின் மூலம் அறிவிக்கவும் செய்தனர். எழுத்து என்ற சொல் தொடக்கத்தில் ஓவியத்தையே குறித்தது. ஓவிய எழுத்துகளிலிருந்தே ஓரொலிக்கு ஓர் எழுத்து என்ற அகர ஆதி எழுத்துகள் உருவாயின. எனவே, ஓவியச் செந்நூல் உருவாக்கிய விஸ்வகர்ம சமூகத்தவரே எழுத்துகளை வடிவமைத்திருக்க வேண்டும். ‘கண்ணுள் வினைஞர்' எனச் சங்க இலக்கியங்கள் இவர்களைக் குறிப்பிடும் சொல்லாட்சியையும் எழுத்தினைக் குறிப்பதற்கு வடமொழியில் வழங்குகிற ‘அக்ஷரம்' (அக்ஷம் = கண்) என்ற சொல்லையும் ஒப்பிட்டால் இவ்வுண்மை புலப்படும். ‘அக்ஷசாலி' என்ற தொடரின் திரிபான ‘அக்க சாலி' என்பதே கன்னட மொழியில் பொற்கொல்லர்களைக் குறிக்கப் பயன்படும் சொல்லாகும்.
அரசர்களின் மனையை - அரண்மனையை வடிவமைக்கும் ஸ்தபதியை ‘நூலறி புலவர்' என நெடுநல்வாடை (வரி 76) குறிப்பிடுகிறது. சரியாகச் சொல்வதானால் அவர்கள் நூல் அறிபுலவர்கள் மட்டுமல்லர், நூல் உருவாக்கிய புலவர்கள். இத்தகைய விஸ்வகர்ம சமூகத்தவரின் பங்களிப்பு, சங்க காலச் சமூகத்தின் வாழ்வியலில் முதன்மையான ஒன்றாக இருந்திருக்க வேண்டும். குறிப்பாகச் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த பாண்டிய மன்னர்களுக்கே, பாண்டிய அரசகுலம் உருவான காலப்பகுதியிலும் எழுத்தறிவு சார்ந்த நிர்வாக நடைமுறைகள் உருவான காலப்பகுதியிலும் விஸ்வ கர்ம சமூகத்தவர் தாம் குலகுருக்களாக இருந்திருக்க வேண்டும். அத்தகைய மக்கட் பிரிவினர் தாம் ஆதிச்சநல்லூரில் உலோக நாகரிகத்தை அறிமுகப்படுத்தினர்







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக